Ads 468x60px

Related Posts Plugin for WordPress, Blogger...

உடல் இயக்கத்தில் உள்ள நுட்பம் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

  நமது உயிருக்கும் உடலுக்கும் ஒத்த உறவு, இனிமையான உறவு இருக்கும் வரையில் தான் உடல்நலம், மனநலம் பாதுகாக்கப் பெறும். இந்த உறவானது நீடித்திருப்பதற்கு ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்று ஓட்டம் இவை மூன்றும் சரியாக இருந்தால் தான் உயிருக்கும், உடலுக்கும் ஒரு தொடரியக்கம், நட்பு, உறவு சீராக இருக்கும். எந்தக் காரணத்தினாலோ ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்று ஓட்டம் இந்த மூன்றிலே ஒன்று தடுக்கப்பட்டாலும், திசைமாறினாலும், வெளியேறினாலும், அளவிலே குறைந்தாலும், ஓட்டத்திலே குழப்பம் அடைந்தாலும், அந்த ஓட்டத்தில் அணு அடுக்குச் சீர்குலைவு ஏற்படும். அது இரத்த ஓட்டத்திலோ, வெப்ப ஓட்டத்திலோ, காற்று ஓட்டத்திலோ எதனாலே வந்தாலும் சரி, மற்ற இரண்டும் கூட ஓட்டத்திலே தடையாகிவிடும். அந்தக் குழப்பத்தை நீக்குவதற்கு அங்கே இருக்கக் கூடிய மின்சக்தி போதாது. அதனாலே அதிகமான மின்சக்தி அங்கே சேர வேண்டியதாகின்றது.

           அவ்வாறு அங்கே சேரும் போது ஏற்கனவே அங்கு தொளை (Puncture) ஆகி இருக்கிறது. அளவுக்கு மேலாகக் காந்த சக்தி மின் சக்தியாக மாறும் போது அந்த இடத்தில் நிச்சயமாக மின்குறுக்கு (short circuit, earthing) உண்டாகும். அதுதான் வலியாக வரும். இந்த மின் குறுக்கு சிறிது நேரம் இருந்தால் அது வலி என்றும், அது இடத்தாலே விரிந்தும் காலத்தாலே நீடித்தும் இருந்தால் அது நோய் அல்லது வியாதி என்றும் கூறப்படுகிறது. அதற்கும் மேலாக உடலில் உள்ள ஜீவகாந்த சக்தி எல்லாம் அதிகமாகச் செலவாகி, வருவதற்கும் போவதற்கும் மத்தியில் உள்ள இருப்பை ஜீவகாந்தம் வெகுவாகக் குறைக்குமானால் அதனை ஈடு செய்ய முடியாமல் போகும். ஈடு செய்யும் முயற்சியில் உயிராற்றல் தோல்வியடையும். உடலை நிர்வாகம் செய்வதற்குப் போதிய காந்த சக்தி, ஜீவ காந்த சக்தி, உற்பத்தி செய்ய முடியாமல் தோல்வியடையும். அந்தத் தோல்வியிலே தானே குறைவுபட்டு அது தன்னாலே ஏற்படக்கூடிய வெப்பத்தினாலே அதனுடைய மின்கலம் (battery) என்று சொல்லக்கூடிய விந்து நாளத்தைத் தகர்த்தெறிந்துவிட்டு அதைத் தாங்கி நிற்கக் கூடிய விந்துவையே அல்லது நாளத்தையே உடைத்துக் கொண்டு வெளியேறிய  பின்னர் அதைத் தாங்கி நிற்கும் உயிர் உடலில் இருந்து பிரிந்து விடும். இதுவே மரணம். இதுதான் உடலியக்கத்தில் உள்ள ஒரு நுட்பம்.

--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

0 கருத்துரைகள்: