Ads 468x60px

Related Posts Plugin for WordPress, Blogger...

"இன்பமும் துன்பமும்"

உலகில் வாழும் உயிரினங்கள் பல கோடியாகும். அவற்றுள் மனித இனம் மேலானது. தொழில்களைத் திறன்படச் செய்வதற்கான துணைக் கருவிகளையும், ஆராய்ச்சிக்கு விஞ்ஞான அறிவோடு நுண்கருவிகளையும் உபயோகிக்கக்கூடிய வகையில் உடல் உறுப்புக்கள் மனிதனிடம் அமைந்துள்ளன. மேலும் ஊறு, ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகிய ஐந்தையும் உணரும் ஐயுணர்வோடு, மனம், உயிர், மெய் எனும் மூன்று மறை பொருட்களை உணரத்தக்க ஆறாம் அறிவும் மனிதனிடம் அமைந்துள்ளது.

             இத்தகைய சிறப்புகளை உணரும்போது தான் ஒரு பேருண்மை தெளிவாகின்றது; இயற்கையே தன் பரிணாமத்தின் உச்சகட்டமாக மனித வடிவில் வந்து, தனது இயல்புகளை ரசித்தும், பெருமைகளை உணர்ந்தும் நிறைவு பெறுகிறது என்ற உண்மை விளங்குகிறது. இவ்வளவு சிறப்புகளையும் பெற்ற மனிதனின் பிறவி நோக்கம், தனது அறிவில் முழுமை பெற்று, இயற்கையின் சிறப்பு உணர்ந்து அமைதியும், நிறைவும் பெறுவதேயாகும். மனிதனுடைய வாழ்வில் துன்பங்கள் மிகுமேயானால் பிறவியின் நோக்கமாகிய அறிவின் வளர்ச்சி தடைப்படும். அறிவானது அமைதியான வழியில் இயங்க நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

              இயற்கையாக எழும் தேவைகள் மூன்று. அவை :- பசி, வெப்ப தட்ப ஏற்றத்தாழ்வு உணர்வு, உடல் கழிவுப் பொருட்களின் உந்துவேக உணர்வு. இந்த மூன்று உணர்வுகளையும் காலத்தோடும், அளவோடும், தக்க பொருட்களையும், வசதிகளையும் கொண்டு (with appropriate facilities and commodities) நிறைவு செய்து கொண்டேயிருக்க வேண்டும். மேலே விளக்கப் பெற்ற பசி உணர்வு, வெப்ப தட்ப ஏற்றத்தாழ்வு உணர்வு, உடல் கழிவுப் பொருட்களின் உந்துவேக உணர்வு இவைகளைக் காலத்தோடு நிறைவு செய்யாவிட்டால், உடலில் அமைதி குலைந்து நலம் கெட்டுத் துன்ப உணர்வுகளாக மாறும்.

              இயற்கைத் துன்பங்களை அவ்வப்போது சமன் செய்து கொண்டே இருப்போமானால் மிகுதி இருப்பது என்ன?  அமைதியும், இனிமையும் தாமே! அமைதியே அறிவு ஆராய்ச்சிக்கும், உயர்வுக்கும் ஒத்ததாகும். எனவே, அமைதி காப்பது என்பதே மனிதனின் தலையாய செயல்.

--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

உடல் இயக்கத்தில் உள்ள நுட்பம் -- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

  நமது உயிருக்கும் உடலுக்கும் ஒத்த உறவு, இனிமையான உறவு இருக்கும் வரையில் தான் உடல்நலம், மனநலம் பாதுகாக்கப் பெறும். இந்த உறவானது நீடித்திருப்பதற்கு ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்று ஓட்டம் இவை மூன்றும் சரியாக இருந்தால் தான் உயிருக்கும், உடலுக்கும் ஒரு தொடரியக்கம், நட்பு, உறவு சீராக இருக்கும். எந்தக் காரணத்தினாலோ ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்று ஓட்டம் இந்த மூன்றிலே ஒன்று தடுக்கப்பட்டாலும், திசைமாறினாலும், வெளியேறினாலும், அளவிலே குறைந்தாலும், ஓட்டத்திலே குழப்பம் அடைந்தாலும், அந்த ஓட்டத்தில் அணு அடுக்குச் சீர்குலைவு ஏற்படும். அது இரத்த ஓட்டத்திலோ, வெப்ப ஓட்டத்திலோ, காற்று ஓட்டத்திலோ எதனாலே வந்தாலும் சரி, மற்ற இரண்டும் கூட ஓட்டத்திலே தடையாகிவிடும். அந்தக் குழப்பத்தை நீக்குவதற்கு அங்கே இருக்கக் கூடிய மின்சக்தி போதாது. அதனாலே அதிகமான மின்சக்தி அங்கே சேர வேண்டியதாகின்றது.

           அவ்வாறு அங்கே சேரும் போது ஏற்கனவே அங்கு தொளை (Puncture) ஆகி இருக்கிறது. அளவுக்கு மேலாகக் காந்த சக்தி மின் சக்தியாக மாறும் போது அந்த இடத்தில் நிச்சயமாக மின்குறுக்கு (short circuit, earthing) உண்டாகும். அதுதான் வலியாக வரும். இந்த மின் குறுக்கு சிறிது நேரம் இருந்தால் அது வலி என்றும், அது இடத்தாலே விரிந்தும் காலத்தாலே நீடித்தும் இருந்தால் அது நோய் அல்லது வியாதி என்றும் கூறப்படுகிறது. அதற்கும் மேலாக உடலில் உள்ள ஜீவகாந்த சக்தி எல்லாம் அதிகமாகச் செலவாகி, வருவதற்கும் போவதற்கும் மத்தியில் உள்ள இருப்பை ஜீவகாந்தம் வெகுவாகக் குறைக்குமானால் அதனை ஈடு செய்ய முடியாமல் போகும். ஈடு செய்யும் முயற்சியில் உயிராற்றல் தோல்வியடையும். உடலை நிர்வாகம் செய்வதற்குப் போதிய காந்த சக்தி, ஜீவ காந்த சக்தி, உற்பத்தி செய்ய முடியாமல் தோல்வியடையும். அந்தத் தோல்வியிலே தானே குறைவுபட்டு அது தன்னாலே ஏற்படக்கூடிய வெப்பத்தினாலே அதனுடைய மின்கலம் (battery) என்று சொல்லக்கூடிய விந்து நாளத்தைத் தகர்த்தெறிந்துவிட்டு அதைத் தாங்கி நிற்கக் கூடிய விந்துவையே அல்லது நாளத்தையே உடைத்துக் கொண்டு வெளியேறிய  பின்னர் அதைத் தாங்கி நிற்கும் உயிர் உடலில் இருந்து பிரிந்து விடும். இதுவே மரணம். இதுதான் உடலியக்கத்தில் உள்ள ஒரு நுட்பம்.

--  யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி